திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பொன்னர். இவரது மனைவி லாவண்யா( வயது 25). இந்த தம்பதிக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். திருப்பூரில் வசித்து வந்த இந்த தம்பதி கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி வீரப்பூரில் மகளுக்கு காதணி விழா நடத்திய பின்னர் பொன்னர் மட்டும் மீண்டும் திருப்பூர் சென்றுவிட்டார். லாவண்யா குழந்தைகளுடன் கஞ்சநாயக்கன்பட்டி
வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து உடனே துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாவண்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.