திருச்சி மாவட்டம், 02.03.2022 அன்று ராஜாராம் என்பவர் தன்னுடைய அலைபேசியில் தங்களது வங்கிக் கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி மூலமாக போலியான லிங்க் ஒன்று வந்திருக்கிறது. ராஜாராம் என்பவரும் அந்த லிங்கை கிளிக் செய்து இருக்கிறார். அந்தப் போலியான லிங்கை கிளிக் செய்தவுடன் அவருடைய
வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் OTP போன்றவற்றை போலியான வெப்சைட்டில் பதிவு செய்திருக்கிறார். பதிவு செய்த சில மணி நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து போலியான லிங்க் மூலம் ரூ.35,999 திருடப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
உடனே ராஜாராம் என்பவர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் வழிகாட்டுதலின் படி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அறிவுறுத்தலின்படி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பால்வண்ணநாதன் மேற்பார்வையில்,
சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் அன்புச்செல்வன் தலைமையில் விசாரணை செய்யப்பட்டு, பின் ராஜாராம் இழந்த ரூ.35,999 தொகையை துரிதமான முறையில் மீட்டு அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும் இதுபோன்ற போலியான லிங்குகளை உருவாக்கி ஆன்லைனில் பணம் திருடும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.