வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா; 22ம் தேதி வரை நடக்கிறது!
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகன் தலங்களில் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக விளங்கி வருகிறது. அருணகிரிநாதருக்கு காட்சி தந்து, திருப்புகழ் பாட அருளிய தலமாகும். திருமுருக கிருபானந்த வாரியார் தம் வாழ்நாள் எல்லாம் போற்றி வணங்கிய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 நாட்கள் பங்குனி உத்திரப்பெருவிழா நடைபெற உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வரும் 18ம் தேதி அதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. காலை 8 மணி முதல் பால்காவடி, அபிஷேகம், 9 மணிக்கு சிங்கார வேலவர் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். 20ம் தேதி மாலை 5 மணிக்கு தினைப்புனம் காத்தல் விழா, 21ம் தேதி இரவு 8 மணிக்கு முருகப்பெருமான் வேலன், வேடன் விருத்தனாக வருதல், யானை விரட்டல் காட்சி நடைபெற உள்ளது.
22ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் வள்ளித்திருக்கல்யாணம் சிறப்புடன் நடைபெற உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 18ம் தேதி காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வருகை தரும் பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பாதுகாப்பு பணிகளை சோமரசம்பேட்டை போலீசார் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறி வுரைப்படி, உதவி ஆணையர் மோகனசுந்தரம், கோயில் நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.