மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் நாளை தெப்போற்சவம்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 10 நாள் தெப்பத் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் கடந்த 9ம்தேதி துவங்கியது. கொடியேற்றத்துடன் முக்கிய நிகழ்ச்சியான தெப்பம் நாளை (வியாழக்கிழமை) இரவு நடக்கிறது.
இதை முன்னிட்டு மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள, கி.பி.1ம் நூற்றாண்டில் கரி கால்சோழனால் கட்டப்பட்ட பிரம்ம தீர்த்தம் எனப்படும் சோமரோகணி தெப்பக்குளம் அழகூட்டப்பட்டுள்ளது. 611 அடி நீளமும், 330 அடி அகலமும் சுமார் 30 அடி ஆழமும் உள்ள இக்குளத்தில் மாநகராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெப்பம் சுலபமாகஓடுமளவிற்கு கூடுதல் நீர் விடப்பட்டுள்ளது.
தெப்பக்குளத்தின் மையத்தில் கி.பி.16ம் நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்ட நீராழி மண்டபம் சீரமைக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நாளை பிற்பகல் கோயிலில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. இரவு 7 மணிக்கு உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு தெப்பக்குளத்திற்கு எழுந்தருள்வார்கள். 8 மணிக்கு தெப்போற்சவம் துவங்கும். இரவு 10 மணியளவில் மையமண்டபத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மூர்த்திகள் கரை சேர்ந்து, வீதிவலம் வந்து நள்ளி 12 மணிக்கு கோயில் சேருவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.