திருச்சியில் கொரோனா – போக்குவரத்து விதிமீறல் ரூ.3.35 லட்சம் அபராதம் வசூல்!
திருச்சி மாநகர காவல்துறையால், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் 27 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மற்றும் அரசு உத்தரவை மீறிபவர்களை தடுக்க சிறப்பு சோதனை மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நேற்று காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திருச்சி மாநகரம் அவர்களின் தலைமையில் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரவி மினிஹாலில் கொரோனா தடுப்பு, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு சரக காவல் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், கோட்டை சரகத்திற்குட்பட்ட வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள், கடை உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், பல்பொருள் அங்காடி உரிமையாளர்கள், பேரங்காடி (Shopping Mall) உரிமையாளர்கள், குடியிருப்பு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் எதிர்வரும் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த தற்போதிலிருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், அரசின் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. திருச்சி மாநகரில் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி எடுத்துக்கொள்வது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதி அளித்தனர்.
மேலும் அரசின் தடை உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் 700-க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 19 நபர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டு, ரூ.3,35,000/- (ரூபாய் மூன்று லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம் மட்டும்)
அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.