குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம்
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை, ஊரக வளர்ச்சி துறை, லால்குடி சரக காவல்துறை, சைல்டு லைன் மைய மற்றும் இணை நிறுவனம் இணைந்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு ஒன்றிய குழு தலைவர் ரசியாராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிசா கலந்துகொண்டு குழந்தை திருமணம் குறித்தும், இளவயது குழந்தைகளுக்கு தரப்படும் பாலியல் வன்முறை, இள வயது குழந்தைகளுக்கு கருக்கலைப்பு, குழந்தை கடத்தல், சிசுக்கொலை, குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு குறித்து விளக்கிப்பேசினார். பெண்கள் நாட்டின் கண்கள் எனும் கூற்றுக்கிணங்க பெண்குழந்தைகளை சமூகத்தில் நல்ல நிலையில் வளர உரிய கல்வி வசதிகள் செய்து தர வேண்டும். மேலும் பெண்களை மதிக்க வேண்டும் என பேசினார்.
கூட்டத்தில் காவல்துறை சார்பில் லால்குடி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கிருத்திகா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மல்லிகா உள்ளிட்ட சைல்டு லயன் சுகாதார உதவியாளர்கள், நகர மற்றும் ஊரக ஒருங்கிணைப்பாளர்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் இளவயது திருமணத்தைக் குறித்தும் விளக்கி பேசினார்கள். கருத்தரங்கில் புள்ளம்பாடி ஒன்றியத்தில் இருந்து 33 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.