மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீ விபத்து குறித்த பாதுகாப்பு ஒத்திகை
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீயணைப்புத்துறையினர் சார்பில் மருத்துவமனை பணியாளர்களுக்கான தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது. இதில் தீத்தடுப்பு மற்றும் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த பயிற்சி வகுப்பும் அதனைத் தொடர்ந்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. அப்போது ஆயில், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவைகளின் தீப்பிடித்தால் அதனை ஈரமான சாக்குப்பையை கொண்டு பாதுகாப்பாக எவ்வாறு அணைக்க வேண்டும், டிசிபி எனப்படும் ரசாயன பவுடர் நிரப்பப்பட்ட தீயணைப்பான் கருவி மற்றும் கார்பன்டை ஆக்சைடு நிரப்பப்பட்ட தீயணைப்பான் கருவி மூலமும் எவ்வாறு தீயைஅணைக்கவேண்டும் என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்ததுடன், மருத்துவமனை பணியாளர்களும் தீயணைப்பான் கருவிகள் மூலம் தீயை அணைக்க வைத்து பயிற்சி அளித்தனர். இதேபோல் கார் உள்ளிட்ட வாகனங்களில் தீப்பற்றினால் ரசாயன நுரையைக் கொண்டு தீயை அணைப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர். தீயணைப்புத்துறையினர் செய்து காண்பித்த பயிற்சிகளை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டதுடன் தீவிபத்து குறித்த தங்களது சந்தேகங்களையும் தீயணைப்புத்துறையினரிடம் கேட்டு அதற்கான விளக்கம் பெற்றனர்.