திருச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளரின் வங்கி லாக்கரில் 110 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி சிக்கியது
திருச்சி, மே 18. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மாவட்ட தொழில் மய்யம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மானியம் வழங்குதல், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் கடன் உதவி பெற்று தருதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. சுயதொழில் தொடங்க கடனுதவி பெற வருபவர்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. – இதனையடுத்து நேற்று முன் தினம் மாவட்ட தொழில் மய்யத்தில் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராதா ரூ. 3 இலட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து உறையூரில் உள்ள பொது மேலாளர் ரவீந்திரன், திருவெறும்பூரில் உள்ள உதவி பொறியாளர் கம்பன் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்த்துறையினர் இரு குழுக்களாக சென்று அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர். இந்த அதிரடி சோதனையில் பொது மேலாளர் வீட்டில் 6 லட்சம் பணம் மற்றும் ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் – இதேபோல் அவர் அலுவலகத்தில் 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தொழில் மய்ய பொது மேலாளர் ரவீந்திரனின் வங்கி லாக்கரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர் – இதில் 110 சவரன் தங்க நகை மற்றும் 1 1/4 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டுள்ளது.

பின்னர், மாவட்ட தொழில்மய்ய மேலாளர் ரவீந்திரன், பொறியாளர் கம்பன் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ்நேற்று வழக்குப்பதிவு செய்தனர். தொடர் விசாரணைக்கு பிறகு 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்றும்,மேலும்துறை ரீதியான விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைசெய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.
சுய தொழில் மற்றும் சிறு குறு தொழில் துவக்கம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக மாவட்ட தொழில் மய்யத்தை நாடி வரும் அடித்தட்டு மக்களிடமிருந்து லஞ்சம் பெறுவது எல்லாம் மிகவும் மோசமான செயல் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.