மணப்பாறை அருகே ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்படும் மேம்பாலத்திற்கு பூமி பூஜை
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து மொண்டிப்பட்டி, டிஎன்பிஎல் தொழிற்சாலை, கரூர் மாவட்டம் பாதிரிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் குறுக்கே சேங்குடி என்ற இடத்தில் செல்லும் உப்பாற்றில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. மழைகாலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்லும்போது ஆற்றைக் கடந்து செல்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. இதனால் சுமார் 5 கிலோமீட்டர் சுற்றி செல்லவேண்டிய நிலை இருந்தது. இதனால் தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் 20 ஆண்டுகால பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது ரூபாய் 1.98 கோடி மதிப்பில் 26 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ள நிலையில் அதற்கான பூமி பூஜை விழா இன்று சேங்குடியில் நடைபெற்றது. திருவரங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்துகொண்டு பூமிபூஜை பணிகளை துவக்கி வைத்தார். கட்டுமான நிறுவனத்தினர் பூஜைகள் செய்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

விழாவில் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி, மொண்டிப்பட்டி ஊராட்சி தலைவர், அரசுத்துறை அதிகாரிகள், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 20 ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்றித் தந்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.