மணப்பாறையில் பைக்குகளை திருடியவர் கைது
திருச்சி, டிச. 9 திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டு போயின. இதையடுத்து மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் மேற்பார்வையில், ஆய்வாளர் கோபி தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் காவல்துறையினர் பொத்தமேட்டுபட்டி பாலம் அருகே வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மொபட்டை நிறுத்தி சோதனை செய்தபோது, அதனை ஓட்டி வந்தவரிடம் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டதோடு, விசாரணையின்பாது முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் அவரை மணப்பாறை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதில், அவர் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(24) என்பதும், மணப்பாறை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியதும், அவர் மீது சில காவல் நிலையங்களில் வாகன திருட்டு வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயன் மீது மணப்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் இருந்த 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.