74வது குடியரசு தினவிழா: தேசியக் கொடியை திருச்சி மாவட்ட ஆட்சியர் ஏற்றி வைத்தார்
நாடு முழுவதும் 74வது குடியரசு தின விழா கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு தின நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், காவல்துறை ஆணையர் சத்திய பிரியா, மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், மத்திய மண்டல டிஐஜி சரவண சுந்தர், காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் மூவர்ண பலூன்கள் மற்றும் ஒரு ஜோடி வெண்புறாக்களை பறக்க விட்டார். அதன்பின் காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ச்சியாக வீரர்கள், காவல் துறையினர், பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெற்றது.
பின்பு சீருடை பணியாளர்கள், சமூக பணியாளர்கள் உள்ளிட்ட துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளும், பதக்கங்களும், காசோலையும் வழங்கப்பட்டது. அது மொத்தம் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 301 ஊழியர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்கள்.மேலும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் 98பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
மேலும் இந்த குடியரசு தின விழாவில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.அதில் வருவாய் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கும் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பேருக்கும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 2 பேருக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 2 பேருக்கும் மாவட்ட தொழில் மையம் சார்பில் 2 பேருக்கும் என மொத்தம் 35 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குடியரசு தின விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபள்ளி,கல்லூரி மாணவிகளின் நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
முதல்முறையாக இந்த ஆண்டு பெண்கள் சிறப்பு காவல் படை அமைக்கப்பட்டு அவர்களும் இந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றது கூடுதல் சிறப்பாக அமைந்தது.