4 நாள்களில் குவாரிகளை திறக்காவிட்டால் 6-ந் தேதி சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும்
தமிழ்நாடு விவசாயிகள் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க தலைவர் மணிகண்டன் தலைமையில் ஏராளமான தொழிலாளர்கள் தில்லை நகர் 5-வது குறுக்குத் தெருவில் உள்ள நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வீடு முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அமைச்சரை சந்தித்து மனு ஒன்றை வழங்கினர்.
அந்த மனுவில், தாளக்குடி மற்றும் மாதவ பெருமாள் கோவிலில் செயல்பட்டு வரும் மணல் மாட்டு வண்டி குவாரிகள் 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, மணல் குவாரிகளை திறந்து மாட்டுவண்டி தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதற்கு அமைச்சர் இன்னும் 4 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையடுத்து திருச்சி மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ) அவசர ஆலோசனை கூட்டம் குடமுருட்டி பாலம் அருகே உள்ள வெண்மணி இல்லத்தில் சேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜி.கே.ராமர், செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மணல் மாட்டுவண்டி குவாரியை இன்னும் 4 நாட்களில் திறக்க ஏற்பாடு செய்யபடும் என்று மாட்டுவண்டி தொழிலாளர்கள் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததுக்கு நன்றி.
அதே வேளையில் மணல் மாட்டுவண்டி குவாரிகள் 4 நாட்களில் திறக்கபடவில்லை என்றால் திருவரம்பூர் தாலுகா, மாணச்சநல்லூர் தாலுகா, லால்குடி தாலுகா, மேற்கு தாலுகா, கிழக்கு தாலுகா, ஸ்ரீரங்கம் தாலுகா உள்ள 2,000 ஆயிரம் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வீடுகளில் வருகிற 3-ந் தேதி கருப்பு கொடிகட்டுவது என்றும், வருகிற 6-ந் தேதி திருச்சி கோர்ட் அருகில் உள்ள நீர்வள துறை அலுவலகம் முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.