ரோந்து காவலர்களுக்கு சிறிய ரக நவீன கேமரா
திருச்சி, மே 23 திருச்சி மாநகர காவல் துறை சார்பில் மன்னார்புரம் போக்குவரத்து சிக்னல் பகுதியில் காவல்துறையினரின் ரோந்து வாகனங்களில் செல்லும் காவல்துறையினரின் சீருடையில் பொருத்திக்கொள்ளும் வகையில் சிறிய ரக நவீன கேமரா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா தலைமை தலைமை தாங்கி, போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் ரோந்து காவலர்கள் 56 பேருக்கு சிறிய ரக நவீன கேமராக்கள் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரமாக்க இந்த சிறிய ரக நவீன கேமராக்கள் ரோந்து காவலர்களின் சீருடையில் பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களின் மூலம் 3 நாட்கள் தொடர்ச்சியாக பதிவு செய்து கொள்ள முடியும். இது 64 ஜி.பி. மெமரி திறன் உள்ளது. அவ்வப்போது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பேக்கப் எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
குறைந்தபட்சம் 5 மீட்டர் தொலைவில் நடைபெறுவதை துல்லியமாக பதிவு செய்து கொள்ளலாம். இது ரோந்து காவல்துறையினருக்கும் மிகவும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக சம்பவ இடத்துக்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தும் போதும், குற்றச்செயல்கள் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தும்போதும் அந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்கள் இந்த கேமராவில் பதிவாகிவிடும். பின்னர் விசாரணைக்கு அந்த பதிவுகள் உதவியாக இருக்கும்.

திருச்சி மாநகரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்களில் மது விற்பவர்கள் மீதும், கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எந்த புகார் வந்தாலும் உடனடியாக காவல்துறையினர் ரோந்து சென்று நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சி மாநகரில் அனுமதி இல்லாத பார்கள் எதுவும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.