மீன் பிடி திருவிழாவில் போட்டி போட்டு நாட்டுவகை மீன்களை பிடித்து சென்ற பொதுமக்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே ஆனாம்பட்டியில் செல்லான்குளம் உள்ளது. ஆனாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்த மழையின் காரணமாக குளம் முழுவதுமாக நீர் நிரம்பியது. இந்நிலையில் தற்போது குளத்தில் நீரின் அளவு வெகுவாக குறைந்து விட்டதால் மீன்பிடித் திருவிழா இன்று நடைபெற்றது. அதன்படி இன்று சாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகர்சாமி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வெள்ளை வீசுதல் என்று கிராம வழக்கப்படி சொல்லப்படும் வெள்ளை நிறத்துண்டை தலைக்குமேல் சுழற்றி விழாவை தொடங்கி வைக்க குளத்தின் கரையில் தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் காத்திருந்த மீன்பிடி ஆர்வலர்கள் போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி மீன் பிடிக்கத் துவங்கினர். விரால், கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி என நாட்டுவகை மீன்கள் அனைவருக்கும் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்தனர். மீன்பிடி திருவிழாவில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானார் கலந்து கொண்டனர்.