திருச்சி, ஜுன் 17 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் பின்னால் மோட்டார் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கழுத்தில் இருந்த மூன்று பவுன் செயினை பறித்துச் சென்றனர். லால்குடி அருகே நெய் குப்பை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (40). இவருடன் பணிபுரியும் மண்ணச்சநல்லூர் வெங்கங்குடி பாலாஜி நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (34). இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள கேண்டினில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை பணியை முடித்துக் கொண்டு மோட்டார் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னர் பல்சர் மோட்டார் பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் ராஜேஸ்வரி கழுத்தில் கிடந்த செயினை பறித்துள்ளனர். அப்போது அவர் கையில் பிடித்த போது மூன்று பவுன் மதிப்புள்ள செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து ராஜேஸ்வரி கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கொள்ளிடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.