தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிற தேர்வுகள் மற்றும் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டு வந்த இந்த பயிற்சி வகுப்புகள் தற்போது அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்படி நேரடியாக நடத்த அனுமதிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) விரைவில் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ மற்றும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 ஆகிய தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று காலை தொடங்கியது. காலை முதல் மாலை வரை வகுப்புகள் நடைபெற்றன. இதில் 50க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சமூக இடைவெளியை கடைபிடித்து பயிற்சி வகுப்பில் அமர வைக்கப்பட்டுள்ளதால் வரும் 6ந் தேதி (திங்கட்கிழமை) முதல் கூடுதலாக மேலும் ஒரு வகுப்பும் தொடங்க இருப்பதாக மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.