திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இந்திய நிறுவனங்களின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானம் இயக்கப்படுவது வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசின் சார்பில் இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த விமானங்களில் துபாய் மலேசியா சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவில் இருந்து வரும் விமானங்களில் பயணம் செய்பவர்கள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு சுங்கத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருவதை அறிந்து கடந்த மாதம் தங்கம் கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த ஆய்வாளர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவது குறைந்திருந்த நிலையில் கடந்த வாரம் திருச்சி விமான நிலையத்தில் சுமார் ரூ.1.13 கோடி மதிப்பிலான 2,275 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆய்வு நடத்திய சுங்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தி வருவதற்கு உறுதுணையாக இருந்ததாக தெரியவந்ததை தொடர்ந்து அன்று பணியிலிருந்த சுங்கத்துறை ஆய்வாளர் அசோக்கை உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.
இவர் கடந்த ஒரு மாதம் முன்பாக விமான நிலையத்தில் பணி ஏற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கான உத்தரவினை மத்திய சுங்கத்துறை ஆணையர் பிறப்பித்துள்ளார்.