திருச்சி மாநகரில் சிலர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி, அவற்றை பதுக்கி வைத்து அவற்றை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று வருகிறார்கள். மாநகர மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கைது செய்வதுடன், மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இவ்வாறு பறிமுதல் செய்யும் மதுபாட்டில்களை முறையாக கணக்கு காட்டாமல் மதுவிலக்கு போலீசாரே அவற்றை மற்ற வியாபாரிகளிடம் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படை போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்திவந்தனர். அப்போது, மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்வதில் முறைகேடு செய்தது உண்மை என்று தெரியவந்தது. இந்த சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் முறையாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தாத திருச்சி மாநகர மதுவிலக்குப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரை பணியிடை நீக்கம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், பணியில் கவனக்குறைவாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணிஇடமாற்றம் செய்யப்பட்டார்.