நண்பனின் மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது….
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை நெருஞ்சலக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மதி என்கிற மதியழகன் (வயது 53). இவர் அதே பகுதியை சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர் மாதவன் என்பவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடி பகுதியை சேர்ந்தவர் 1-வது குற்றவாளியாகவும் மதி என்கின்ற மதியழகன் 2-வது குற்றவாளியாகவும் உள்ளனர். இந்த வழக்கில் நண்பர்களான இருவரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருந்தபோது மதி என்கின்ற மதியழகன் ஜாமீனில் வெளிவந்த நிலையில். புறத்தாக்குடி பகுதியைச் சேர்ந்த அவரது நண்பன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.
இந்நிலையில் புறத்தாக்குடி பகுதியை சேர்ந்த தனது நண்பனை ஜாமினில் எடுப்பதாக மதி என்கிற மதியழகன் கூறி இருந்தார். இதனால் அவரது நண்பன் வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் 2 தேதி மதியம் தனது நண்பனின் வீட்டிற்கு சென்ற போது வீட்டில் தனியாக இருந்த நண்பனின் 11 வயது மகனுக்கு மதியழகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுவன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளான் இது பற்றி சிறுவனின் தாய் விசாரித்தபோது, மதியழகன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் மதியழகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.