ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி
திருச்சி,ஏப்.1 திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள கொளக்குடி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியுடன் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் கடந்த 5 வருடத்திற்கு முன்பு ஏரியை சீரமைத்து தருவேன் என வாக்குறுதி கூறிவிட்டு சென்றீர்கள். தற்போது 5 வருடம் கழித்துதான் இங்கே வந்திருக்கிறீர்கள்? எதற்கு வந்தீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாரிவேந்தர் சட்டென சுதாரித்துக் கொண்டு நான் வரும்போது நீ பாக்கல, நீ வரும்போது நான் உன்ன பாக்கல என கூறிவிட்டு தனக்கு வாக்கு அளிக்குமாறு பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன் சென்றிருந்த கட்சியினர் ஓடி சென்று கேள்வி கேட்ட அந்த நபரை சுற்றி வளைத்து சமாதானம் செய்தனர்.
இச்சம்பவத்தால் அங்கு உடனடியாக பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட பாரிவேந்தர் புறப்பட்டு அடுத்த ஊருக்கு சென்றார். வாக்கு கேட்டு சென்ற வேட்பாளர் பாரிவேந்தரிடம் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் பிரச்சாரத்தில் ஈடுபடும் பாரிவேந்தர் பின்னால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஏராளமான கார்கள் செல்வதையும் காண முடிகிறது. இதைத் தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.