பெரம்பலூரில் அருண்நேருவை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம்
பெரம்பலூர்,ஏப்.3 திராவிட மாடல் திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்தினால் உலகமே இந்தியாவை திரும்பி பார்ககும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவுக்கு ஆதரவாக நேற்று இரவு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும் போது, எனக்கு இந்தியாவையும் பிடிக்கும், தமிழ்நாட்டையும் பிடிக்கும். நம் உறவு அரசியலையும் தாண்டியது. அதனால்தான் நான் இங்கு வந்து நிற்கிறேன். நான் இந்த முறை சீட்டுகேட்டு வரவில்லை. உங்களுக்காக நியாயம் கேட்க வந்திருக்கின்றேன். நாம் ஒன்றிய அரசுக்கு செலுத்தும் வரி ஒவ்வொரு ரூபாயிலும் எவ்வளவு நமக்கு திரும்ப கிடைக்கிறது என்றால், வெறும் 29 பைசா மட்டுமே. இப்போது தமிழ்நாடு அரசால் உங்களுக்கு வழங்கப்படும் அத்தனை. நலத்திட்டங்களும் இந்த 29 பைசாவை வைத்துக் கொண்டு தான் நடைபெறுகிறது. காமராஜர் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்தார். எம்ஜிஆர் அதனை தனது. ஆட்சி வரும்போது மதிய உணவு திட்டமாக மாற்றி அமைத்தார். அதற்குப் பிறகு காலையில் வரும் போதே பட்டினியாக பள்ளிக்கு மாணவர்கள் வரக்கூடாது என்பதற்காக மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கிவைத்தார்.
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை நாங்கள்தான் சொன்னோம், நாங்கள் தான் சொன்னோம் என மக்கள் நீதி மய்யம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் சொல்வது பெரிதல்ல, அதனை செயல்படுத்திக் காட்டியவர் மு.க.ஸ்டாலின் தான். அதற்காக நான் இங்கே வந்திருப்பதை நியாயமாக கருதுகிறேன். அந்த 29 பைசா சொன்னேனே, அதிலே தான் இத்தனை திட்டங்களையும் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். பெண்களுக்கு அரசு நகரப் பேருந்தில் கட்டணமில்லா பயணம், கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத் தொகை பெறும் புதுமைப் பெண் திட்டம், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு ஊக்கத்தொகை, அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்றெல்லாம் தமிழ்நாடு முதல்வர் செய்கிறார். மீதி 71 பைசாவை எங்களுக்கு கொடுத்தால் இன்னும் என்னென்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் யோசித்து பாருங்கள். திராவிட மாடல் திராவிட மாடல் என்று கேலி செய்கிறார்கள், இதே வீதியில் எதிர்க்கட்சியினரும் நாளை கூட்டம் நடத்துவார்கள். இன்னும் வேகமாக மண்ணாங்கட்டி திராவிட மாடல் என்பார்கள். மண்தான் மனிதர்கள் அதனை மறந்து விடாதீர்கள். நான் 2020ல் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன் திராவிட மாடல் திட்டங்களை செயல்படுத்தினால் இந்தியாவை உலகமே திரும்பி பார்க்கும் என்று பேசினார்.