செல்லாண்டியம்மன் கோவில் பங்குனி தேரோட்ட விழா
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மணியங்குறிச்சியில் மிகவும் பழமை வாய்ந்த செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா 20 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் பங்குனித் திருவிழாவானது கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பதினாறாம் நாள் முக்கிய விழாவான செல்லாண்டியம்மன் தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செல்லாண்டியம்மன் கோவிலிலிருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேரில் எழுந்தருளிய நிலையில் மணியங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தேரை வடம் பிடிக்க அம்மனின் தேரானது ஊரின் நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. முன்னதாக தேரோட்டத்தின் போது ஆங்காங்கே பக்தர்கள் தேங்காய் உடைத்து தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.
தேரானது நிலையை அடைவதற்கு முன்பாக சாலையில் இருந்து கீழே இறங்கிய நிலையில் துவரங்குறிச்சி தீயணைப்புத்துறை அதிகாரி நாகேந்திரன் தேரின் பின்பக்கமாக உந்து கட்டையில் ஏறி நின்று தேர் நிலைக்கு வர உதவிய செயலை அனைவரும் பாராட்டினர். தேரோட்டத்தைத் தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏப்.5 ம்தேதி வெள்ளிக்கிழமை பாரி வேட்டை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவில் மணியங்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.