தடை செய்யப்பட்ட 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

0 337
Stalin trichy visit

திருச்சி, மே 22 திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.வருண்குமார், வழிகாட்டுதலோடு, திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலருக்கு பொதுமக்களிடமிருந்து வந்த புகாரையடுத்து திருச்சி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R.ரமேஷ்பாபு  தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு  நேற்று இரவு (21.05.2024)  தேவதானம் பகுதியில் உள்ள தினேஷ் டீ கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் சுமார் 1.400 கிலோ கிராம் பதுக்கி வைத்து விற்பனை செய்த மாரியப்பன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

மேலும், விசாரணையில் எங்கிருந்து அப்புகையிலை பெறப்பட்டது என்பது குறித்து அவரை விசாரித்த போது நந்தி கோயில் தெருவை சேர்ந்த ரஜினி என்ற பெரியண்ணா என்பவர் மூலம் ஆளவந்தநல்லுாரில் உள்ள ஒரு மளிகை கடையில் வாங்கியதாக கூறியதன் அடிப்படையில் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில், அந்த மளிகை கடையின் உரிமையாளரான ஜாஹீர் உசேன் மற்றும் அவர் மகன் ரியாஸ் முகமது ஆகிய இருவரும் வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, கைப்பற்றப்பட்டது. கைப்பற்ற புகையிலை பொருட்களிலிருந்து 5 உணவு மாதிரிகள் பகுப்பாய்விற்காக எடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடையின் உரிமையாளர் ஜாஹீர்உசேனின் மகன் ரியாஸ் முகமது இரு சக்கர வாகனத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. மேலும், அக் கடையிலிருந்து மாரியப்பன் மற்றும் ரஜினி என்ற பெரியண்ணா ஆகிய இருவரும் அவரவர் ஆட்டோவில் வைத்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது. மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு கடைகளும் சீல் செய்யப்பட்டது.

எனவே, இரண்டு ஆட்டோக்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும், சுமார் 65 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களையும், இக்குற்ற செயலில் ஈடுபட்ட மேற்குறிப்பிட்ட 4 நபர்களையும் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் உரிய சட்டப்படியான மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, செல்வராஜ் மற்றும் கந்தவேல் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், பொதுமக்களும் இது போன்ற புகையிலை பொருட்களை யாரேனும் விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்திருந்தாலோ கீழே கண்ட எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும், புகார் தெரிவிப்பவரின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்று திருச்சி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R.ரமேஷ்பாபு தெரிவித்தார். 

தொலை பேசி எண்: 99 44 95 95 95

மாநில புகார் எண் : 94 44 04 23 22

Leave A Reply

Your email address will not be published.