முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் கைது
கரூர், ஜூலை 17 அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர். கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அசல் சொத்து ஆவணம் தொலை போனால் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ் (Non traceable Certificate) பெறப்பட்டு அந்த சான்றிதழ் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதையடுத்து நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் அளித்த புகாரியின் அடிப்படையில் மேலக் கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் விசாரித்த போது, ஆய்வாளர் பிரத்திவ்ராஜ் அது போன்று சான்று கொடுக்க வில்லை என கூறியுள்ளார். இதையடுத்து அவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பிரிதிவ்ராஜ் தற்போது தாம்பரம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் வாங்கி சென்றுள்ளார். ஆனால் இதுவரை அவர் அங்கு பொறுப்பேற்காத நிலையில் தற்போது அவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆய்வாளர் பிருத்திவிராஜ் கரூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அவர் கரூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் எம் .ஆர் விஜயபாஸ்கருக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இதையடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தை தேர்வு செய்து அங்கு Non traceable Certificate பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.