காதல் தோல்வி: கல்லூரி மாணவர் தற்கொலை

0 168
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் காதல் தோல்வியால் கல்லூரியின் 3 வது மாடியில் இருந்து குதித்து  மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சுப்பையா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் அழகுமணிகண்டன் (20) . இவர் சிறுகனூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ.3-ம் மூன்றாமாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த அழகுமணிகண்டனுக்கும், அதே வகுப்பில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ஒரே கல்லூரியில் இருவரும் படித்ததால் அடிக்கடி இருவரும் சந்தித்து கொண்டனர். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. நேரில் சந்திக்க முடியாத நாட்களில், இருவரும் செல்போன் மூலம் பேசி தங்களது காதலை வளர்த்துக்கொண்டனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அழகு மணிகண்டன் போன் செய்தால் அந்த மாணவி, போனை எடுக்காமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாணவியை நேரில் சந்தித்த அழகு மணிகண்டன் தனது செல்போன் அழைப்பை தவிர்த்தது குறித்து கேட்டுள்ளார். அப்போது, அந்த மாணவி நம் காதல் முறிந்தது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அழகு மணிகண்டன் மனமுடைந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் அவர் திடீரென்று கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்தார். இதில் அழகு மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.இதைக் கண்ட சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு சமயபுரம் அருகே இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அழகுமணிகண் டனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகுமணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.