தனியார் பஸ் மோதியதில் மகன் கண் முன்னே தாய் உயிரிழப்பு
திருச்சி, நவ.9 சாலை விபத்தில் தனியார் பேருந்து மோதியதில் மகன் கண்முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சிக்னலை கடந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே சென்றபோது முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தை மோதியது. இதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணம் செய்த பெண் தலை மீது அந்த தனியார் பஸ் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து திருச்சி கண்டோன்மென்ட் போக்குவரத்து துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில்
இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஏ.டி, டவுன் பஞ்சாயத்து ஏ.ஓவாக பணிபுரிந்து வரும் கோவிந்தராஜ் என்பதும் பின்னால் அமர்ந்து வந்த பெண்மணி அவரது தாயார் கண்ணம்மா (வயது 75) என்பதும் தெரியவந்தது. மேலும் தனியார் பஸ் ஓட்டி வந்த டிரைவர் மாத்தூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பது தெரியவந்தது.
மேலும் தனியார் பஸ் டிரைவர் அஜித்குமாரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இருசக்கர வாகனம் ஓட்டி வந்த கோவிந்தராஜ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் உயிரிழந்த கண்ணம்மா உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கோர விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து வாகன ஓட்டிகள் தெரிவிக்கையில் தொடர்ந்து திருச்சி மாநகரில் தனியார் பஸ்கள் அதிவேகமாகவும், அதிக ஒலியை எழுப்பி கொண்டு செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.