தமிழ்நாட்டில் ஒருமொழிக் கொள்கையை ஏற்க தி.மு.க. தயாரா? :டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி
திருச்சி, மார்ச் 17 திருச்சியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், கடந்த 19 ஆம் தேதி முதல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று காலை திருச்சியிலும், மாலை கரூரிலும் நடைபெற்றது. . இதில் மாவட்ட, ஒன்றிய, கிளைக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, முன்னதாக தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் …
திமுக ஆட்சியை வரும் 2026 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்டம் தோறும் நடந்துவருகிறது. அருந்தியர் இன மக்களுக்கு 3% உள் ஒதுக்கீடு வழக்கப்பட்டதன் விளைவாக, அருந்தியர் இனத்தில் உள்ள தெலுங்கர்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர். பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திரர் குல வேளாளர் மற்றும் ஆதி திராவிடர் மக்கள் பயனடையவில்லை. எனவே, பட்டியல் இன மக்களை கணக்கெடுத்து பின்னர்18 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பிறித்து வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் மே17 ஆம் தேதி, திருச்சியில் பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை மறைத்துவிட்டு, அந்த இடத்தை புலிகள் காப்பகம் என அறிவித்து, வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்துள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, சொத்து வரி குறைப்பு, சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் வழங்கப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பல வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு அதனை நிறைவேற்ற வில்லை.
டாஸ்மாக் நிறுவனத்தில் மட்டும் ஒரு லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. அடுத்ததாக கனிமவளத்துறை, மின் வாரியத்துறை, வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை என அரசு அலுவலகங்கள் முழுவதும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒரு கட்சி ஆட்சி முறைக்கு எதிராக, கூட்டணி மந்திரி சபையை ஏற்றுக் கொண்டு, மக்கள் நலனை பாதுகாக்க கூடிய, லஞ்சம் – ஊழலுக்கு எதிராக கைகோர்க்க கூடிய, அரசியல் கட்சிகளோடு இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பாராட்ட தகுந்தது இல்லை. இந்த பட்ஜெட் வரும் தேர்தலை மையப்படுத்தி வெளியிட்டதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் கடன் சுமை இரண்டுமடங்காக்கிவிட்டது. திமுக கட்சியினர் நடத்தி வரும் மதுபான ஆலைகளில் வரியைப்பு நடந்துள்ளது. இதற்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என ஆளுநரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி கேட்டுள்ளேன். இதுவரை அவர் அனுமதி வழங்கவில்லை.
ஒரு லட்சம் கோடிக்கு மேலாக டாஸ்மாக் ஊழல் நடத்துள்ளது. தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவிற்கும், அண்டை மாநிலங்களுக்கும் கடத்தப்படுகின்றன. தேசிய கல்விக் கொள்கையை மக்களிடம் மாநிலம் வாரியாக எடுத்துரைத்து, மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அதில் உள்ள நன்மை, தீமைகளை, பரிசீலனை செய்த பின்னர் மும்மொழிக் கொள்கையை அறிவித்திருக்க வேண்டும். இதில் மத்திய அரசு தவறு இழைத்துவிட்டது. ஒரு மொழிக் கொள்கையை பின்பற்றி பல நாடுகள் முன்னேறி உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் ஒரு மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு திமுக அரசு அறிவிக்க தயாரா?