முசிறி அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
திருச்சி, மார்ச் 24 திருச்சி மாவட்டம் முசிறி அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து வழிப்பறி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்
நாமக்கல் மாவட்டம், பவித்திரம் புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சத்யா (31) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் பவித்திரம்புதூரில் இருந்து தா.பேட்டை நோக்கி ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக பைக்கில் வந்துள்ளார். அப்போது தா .பேட்டை துறையூர் மெயின் ரோட்டில் ஊரக்கரை செல்லாண்டியம்மன் கோவில் அருகே சத்யாவை தடுத்து நிறுத்திய நபர் கத்தியை காட்டி மிரட்டி தான் பெரிய ரவுடி என்றும், பையில் இருக்கும் பணத்தை கொடுத்து விடு என மிரட்டியுள்ளார். அவர் பணம் தர மறுத்த நிலையில் அவர் பையில் இருந்த பணம் ரூ 5,200 யை வலுக்கட்டாயமாக பறித்து கொண்டு அந்த நபர் பைக்கில் ஏறி தப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து சத்யா தா.பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி செய்தது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தா.பேட்டை பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (42) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தா.பேட்டை அருகே உள்ள மகாதேவி என்ற பகுதியில் போலீசார் மனோஜ்குமாரை பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது சத்யாவிடம் இருந்து வழிப்பறி செய்த ரொக்க பணம் மீட்கப்பட்டது. சத்யாவிடம் வழிப்பறி செய்தது மனோஜ்குமார் தான் என்பதும் உறுதியானது. இதையடுத்து போலீசார் மனோஜ்குமாரை கைது செய்து துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் காமினி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளின் மீது நடவடிக்கைகள் குறித்த தொடர் கண்காணிப்பில் தடை ஏற்படக் கூடாது என்று கூறியிருந்த நிலையில் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 33 வழக்குகளில் தொடர்புடைய மனோஜ்குமார் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள மனோஜ்குமார் மீது 27 வழிப்பறி வழக்குகளும், 6 திருட்டு வழக்குகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மனோஜ் புலனாய்வு வார பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றி வருவதாக கூறி அரசு அதிகாரிகளை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.