பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் பேட்டி; 3ந் தேதி வரை நடக்கிறது
திருச்சி மாவட்ட வன அதிகாரி கிரண் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு வனத்துறையின் மூலம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வன விலங்கு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் திருச்சி மண்டல வனப்பாதுகாவலர் என்.சதீஷ் அறிவுறுத்தலின் படி இந்த ஆண்டுக்கான வன விலங்கு வாரவிழா திருச்சி வனக்கோட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, வன உயிரினம் தொடர்பான குறும்படம் உருவாக்குதல் மற்றும் வன உயிரினம் தொடர்பான சின்னங்கள் உருவாக்குதல் ஆகிய 2 போட்டிகள் கடந்த 25-ந்தேதி முதல் வருகிற 3ந்தேதி வரை ஆன்லைன் மூலம் மாநில அளவில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது குறும்படங்கள் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றை முறையே http://forms.gle/DXCkKe2xCRFxGugd9மற்றும் http://forms.gle/oPQ39VGrK6NDvkhm8ஆகிய ஆன்-லைன் இணைப்பின் மூலம் வருகிற 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
வனஉயிரினம் தொடர்பான குறும்படம் உருவாக்குதல் போட்டியில் கலந்து கொண்டு மாநல அளவில் வெற்றி பெறும் முதல் 3 பேருக்கு முறையே காசிரங்கா தேசிய பூங்கா(அசாம்), ஜங்கிள் லாட்ஜஸ்(கர்நாடகா), முதுமலை புலிகள் காப்பகம்(தமிழ்நாடு) ஆகிய இடங்களுக்கு பயணம் சென்று வர வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். குறும்படம் மற்றும் சின்னங்கள் உருவாக்குதல் போட்டிகளுக்கு ஆன்-லைன் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளின் கீழ் மட்டுமே உருவாக்கி அனுப்ப வேண்டும்.
மேலும் திருச்சி மாவட்ட அளவில் வன உயிரினம் தொடர்பான ஓவியம் மற்றும் கட்டுரை போட்டியும் ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் http://forms.gle/3ToKt4eiDDd766ML7என்ற ஆன்லைன் இணைப்பின் மூலமாக வருகிற 3-ந்தேதி மாலை 5 மணிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.