அட்மா திட்டத்தின் கீழ் பண்ணை பள்ளி வகுப்பு
திருச்சி, ஆக.1 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைகோரை கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நன்னெறி வேளாண்மை முறைகள் தலைப்பில் பண்ணை பள்ளி வகுப்பு நடைபெற்றது.
இதில் லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சத்யபிரியா பேசுகையில் விவசாயிகள் மண் மாதிரி சேகரித்தல், கோடை உழவு செய்தல் அதன் பயன்கள், தக்கை பூண்டு விதைத்தல், சான்று பெற்ற விதைகள் தேர்வு, உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி செய்தல் , தமிழ் மண்வளம், நில உடமை பதிவு, பாரத பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டம் வழிகாட்டு முறைகள் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
குமுளூர் வேளாண்மை கல்வி நிலைய பேராசிரியர் விஜய் உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி செய்தல், நெற்பயிரில் நாற்றங்கால் இலைப் பேன்கள்,நுண்ணூட்ட உரங்கள் , அடி உரம் இடுதல், நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கி கூறினார்.
வேளாண்மை உதவி அலுவலர் ராஜசேகரன் பேசுகையில் உயிர் உரங்கள், சான்று பெற்ற விதைகள், ஜிப்சம், ஜிங் சல்பேட் ஆகியவற்றை மானிய விலையில் விவசாயிகள் பெற்று பயனடைய கேட்டுக்கொண்டார்.
அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் சபரிச்செல்வன் பேசுகையில் வெளி மாநில பயிற்சி கண்டுணர்வு சுற்றுலா, மாநிலத்திற்கு உள்ளான பயிற்சி மற்றும் கண்டுணர்வு சுற்றுலா, செயல் விளக்கத் திடல்கள் அமைத்தல் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக் பேசுகையில் உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், தமிழ் மண்வளம் மண் வளம் கண்டறிந்து அதற்கு ஏற்ப உரங்கள் பயன்படுத்துதல் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
இப்பண்ணை பள்ளியில் எசனைக் கோரை கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் 25 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.