புகைப்பிடித்தப்போது பற்றிய தீயில் சிக்கிய முதியவர் மீட்பு
திருச்சி, ஆக.4 திருச்சி உறையூர் ராமலிங்க நகர் அகமது காலனி 5வது கிராசில் வசித்து வருபவர் ராஜா நாகேந்திரன்(வயது60) மனநிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனிமையில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் காலை புகை பிடிப்பதற்காக முயன்ற போது எதிர்பாராத விதமாக தீ பற்றி கொண்டது. தீ பற்றியது கூட தெரியாமல் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீடு முழுவதும் புகை மூட்டத்துடன் இருந்தது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வீட்டின் உள்ளே மாட்டிக் கொண்ட ராஜா நாகேந்திரனை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.