முதல்வர் அறிவித்த ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
முசிறி தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் மணிவாசகம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கண்ணன், நாகராஜன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
அப்போது கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய் துறை அலுவலர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் அறிவித்தபடி ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்விற்கு நில அளவை பயிற்சி மற்றும் பவானிசாகர் அடிப்படை பயிற்சிகளை உரிய காலத்தில் மாவட்ட அளவில் நடத்திட வேண்டும் அல்லது பயிற்சிக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.