தொட்டியம் அருகே கத்தியை காட்டி மிரட்டி நகைப்பறித்த மர்ம நபர்: காவல்துறையினர் விசாரணை
திருச்சி, ஆக.22 திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஏலூர் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி . இவரது மனைவி சவிதா.இவர்களுக்கு இரண்டு வயதில் ரக்ஷிதா என்ற குழந்தை உள்ளது. வழக்கம்போல பழனிச்சாமி வேலைக்கு சென்று விட்ட நிலையில் சவிதா குழந்தையுடன் வீட்டிலிருந்து உள்ளார்.நேற்று மாலை 4 மணி அளவில் திறந்திருந்த வீட்டிற்குள் ஹெல்மெட் அணிந்த ஆசாமி ஒருவர் சத்தமின்றி உள்ளே நுழைந்துள்ளார்.
ஹாலில் அமர்ந்திருந்த குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு சவிதாவை நகைகளை கழட்டித் தருமாறு மிரட்டி உள்ளார்.இதில் பயந்து போன சவிதா தோடு, தாலி உள்ளிட்ட நகைகளை கழட்டி கொடுத்துள்ளார். அதனை வாங்கிக கொண்ட ஆசாமி அங்கிருந்து பைக்கில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து சவிதாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிந்து வீடு புகுந்து துணிகர திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சம்பவம் நடைபெற்ற இடத்தை முசிறி போலீஸ் டிஎஸ்பி செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளார்.