திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுகானூர் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதுடைய மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளி பெண். அதேப் பகுதியைச் சேர்ந்த சிக்கன் மகன் மருதை(55), செம்மறிஆடு மேய்ப்பவர். இவரது வீட்டின் பின்புறம் உள்ள மாற்றுத்திறனாளி பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் நெருங்கி பழகி வந்தார்.
கடந்த 2018 ம் இதுகுறித்து தனது தாயிடம் அந்த பெண் தெரிவித்தார். இதை கேட்ட அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மருதையிடம் கேட்டதற்கு, மருதை மன்னிப்பு கேட்டார். இதனால் அவர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வில்லை.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் அந்த பெண்ணின் தாய் வளையல் விற்பனை செய்ய வெளியூர் சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டி மீண்டும் அவரை பலாத்காரம் செய்தார். இதனால் பயந்து போன அந்த பெண் தனது தாயிடம் கூறவில்லை.
இந்நிலையில் அந்த பெண்ணின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால், அச்சமடைந்த அவரது தாய் அவரை அழைத்து தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அந்த பெண்ணை பரிசோதனை செய்ததில் அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்ட அந்த பெண்ணின் தாய் அதிர்ந்து போனார். இதுகுறித்து அவர் லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்குப்பதிவு செய்து மருதையை கைது செய்தார்.