மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரேஷன்கார்டு வழங்க சிறப்பு முகாம்; 9-ந் தேதி நடக்கிறது
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுவினியோக திட்டத்தின் கீழ் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரேஷன்கார்டுகள் வழங்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பிஎச்எச் மின்னணு ரேஷன்கார்டு வழங்குவதற்கு ஏதுவாக, 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் சனிக்கிழமையான வரும் 9-ந் தேதி அனைத்து தனி தாசில்தார்கள் மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
புகைப்படம், ஆதார்அட்டை, நலவாரிய உறுப்பினர் மற்றும் ஏதேனும் ஒரு இருப்பிட ஆதாரம் பெற்று புதிய ரேஷன்கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வேறு இருப்பிட ஆதாரங்கள் இல்லாதபட்சத்தில் வீட்டு வாடகை ஒப்பந்தமே போதுமானதாகும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மட்டுமே மின்னணு ரேஷன்கார்டு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் சிறப்பு முகாமில் அளிக்கும் புதிய ரேஷன்கார்டுக்கான விண்ணப்ப ஆவணங்களை சிறப்பு முகாமிலேயே www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் பதிவேற்றங்கள் செய்யப்படும்.
எனவே புதிய மின்னணு ரேஷன்கார்டு கோரும் மூன்றாம் பாலினத்தவர்கள் மேற்படி சிறப்பு முகாமில் கலந்து கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய மின்னணு ரேஷன்கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.