திருச்சி மாநகர் மற்றும் மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு குற்ற புலனாய்வுத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி ரேசன் அரிசி கடத்துபவர்கள், தகுந்த ஆவணங்களின்றி நெல் மூட்டைகளை எடுத்து செல்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி-சென்னை பைபாஸ் சாலை சமயபுரம் அடுத்த கொணலை அருகே கலப்பட டீசல், டேங்கர் லாரியில் வைத்து விற்கப்படுவதாக மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று டேங்கர் லாரியில் சோதனை செய்தனர். அப்போது அதில் 10 ஆயிரம் லிட்டர் கலப்படடீசல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரிடிரைவரான பெரம்பலூர் மாவட்டம் காரை ஆலத்தூரை சேர்ந்த ரவி (46) என்பவரை கைது செய்து டீசலுடன் டேங்கர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும்இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.