மதுபோதையில் தகராறு : மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு
திருச்சி, செப். 25 திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கண்ணனூர் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜீவன் (46) டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவரது மகன் ராஜகுரு (24) கடந்த நான்கு மாதங்களாக தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஜீவன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் தந்தை, மகன் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த ஜீவன் தனது மகனிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராஜகுருவிற்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜகுரு வீட்டில் இருந்த இரும்பு கரண்டியை எடுத்து தந்தையை தாக்கி உள்ளார்.
இதில் கீழே விழுந்த போது ஜீவனுக்கு தலையில் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தா.பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் ராஜகுருவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தா.பேட்டை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் மகன் அடித்ததில் கீழே விழுந்த தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.