மேல புலிவார் சாலைக்கு மாறிய காந்தி மார்க்கெட்
நூற்றாண்டு பழமை வாய்ந்த காந்தி மார்க்கெட்டில் சில்லறை மற்றும் மொத்த வியாபாரக் கடைகள் என சுமார் 2100 கடைகள் வரை செயல்பட்டு வந்தது.திருச்சி மாவட்ட மின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள், வாடிக்கையாளர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வந்து கூடுவதால் இதன் மூலம் கொரோனா தொற்று அதிகம் பரவுவதாக புகார் எழுந்தது.இதனடிப்படையில் திருச்சி காந்தி மார்க்கெட் இன்று காலை 6 மணி முதல் மேலப்புலி வார் ரோடு பகுதியில் செயல்படுகிறது.இதற்கு முன்பாக காந்தி மார்க்கெட்டை பொன்மலை ஜி கார்னர் பகுதிக்கு மாற்ற மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் வியாபாரிகள் பல்வேறு காரணங்களை கூறி அங்கு செல்ல மறுத்து விட்டனர். எனவேதான் மாநகராட்சி நிர்வாகம் கடைகளை மேலப்புலிவார் ரோட்டுக்கு மாற்றம் செய்தது. இங்கிலீஷ் காய்கள் எனப்படும் கேரட், பீட்ரூட், நூக்கல் விற்பனைக்கு பாலக்கரை பகுதியில் கடை போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதேபோன்று தெப்பக்குளம் காமராஜர் சிலையிலிருந்து மரக்கடை வெல்லமண்டி சாலை வரை இருபுறமும் கடைகள் அமைக்கப்பட்டு காய்கறி விற்பனையானது இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.காய்கறி விலைகள் இன்று வழக்கத்தை விட மிகக் குறைவாக உள்ளது. இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் இங்கு வந்து குவிகின்றனர்.பலரும் போர்க் கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாது காய்கறி வாங்கிச் செல்வதை காணமுடிகிறது.போலீசார் பலமுறை ஒலிபெருக்கியில் அறிவித்தும் அதனை காதில் வாங்கிக் கொள்ளாத வாடிக்கையாளர்கள் காய்கறி வாங்குவதில் குறியாக உள்ளனர்.கொரோனா பரவலைத் தடுப்பதற்காகவே காந்தி மார்க்கெட் பகுதியானது மேலப்புலி வார் சாலைக்கு மாற்றப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் நோக்கம் இங்கு ஈடேறவில்லை என்பது வருத்தமான உண்மை.எனவே கடந்தாண்டு இருந்ததுபோல் இ ஆர் மேல்நிலைப்பள்ளி, சத்திரம் பேருந்து நிலையம், காவிரி பாலம் உள்ளிட்ட 10 இடங்களில் காய்கறி சந்தை கடைகளை அமைத்தால் கூட்டம் வெகுவாக குறையும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.