தொட்டியத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் : எம்எல்ஏ பங்கேற்பு
திருச்சி, அக். 27 திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
தொட்டியம் கொங்குநாடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மாவட்ட சுகாதார மருத்துவ அலுவலர்
ஹேமசந்த் காந்தி, மருத்துவத்துறை இணை இயக்குனர் கோபிநாத், தொட்டியம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காந்திமதி, கொங்குநாடு கல்லூரி சேர்மன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவக் கல்லூரி டீன் குமாரவேல் சிறப்புரையாற்றினர்.முகாமில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட நான்கு பெட்ரோல் ஸ்கூட்டர்,மடக்கு சக்கர நாற்காலி ஐந்து நபர்களுக்கு, செயற்கைக்கால் ஒருவருக்கும்,காது ஒலி கருவி நான்கு நபர்களுக்கும் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவ முகாமில் பொது மருத்துவம்,
எலும்பு மருத்துவம், ரத்தம் பரிசோதனை, இசிஜி,ஸ்கேன் , எக்கோ ,இதய மருத்துவம்,மாற்றுத்திறனாளிகளுக்கான பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் ,
குழந்தை மருத்துவம், கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனைகள் ஆலோசனைகள் மருந்துகள்,ஆயுர்வேதா,சித்தா மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளும் ஆலோசனைகளும் மருந்து மாத்திரைகளும் பயனீட்டாளர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பயனாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
முகாமில் தொட்டியம் தாசில்தார் தமிழ்ச்செல்வன்,
ஒன்றிய ஆணையர் கிருஷ்ணகுமார், தொட்டியம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நலன் காக்கும் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண் அகல்யா என்பவர் கூறும்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். எக்கோ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். இந்த பரிசோதனை செய்ய வேண்டுமானால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தொட்டியத்தில் நடைபெற்றுள்ளதால் இந்த முகாமிலேயே பரிசோதனையை செய்து கொண்டிருக்கிறேன். குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அலைச்சலும், செலவும் மிச்சமாகி உள்ளது. இது போன்ற முகாம்களையும் மக்கள் பயன்பெறும் நல்ல திட்டங்களையும் தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் தொடர வேண்டும் என்று கூறினார்.