தா.பேட்டையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் : முசிறி எம்.எல்.ஏ வழங்கினார்
திருச்சி,டிச.6 தா .பேட்டை ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் ஆயிரம் பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் – முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் வழங்கினார்.
திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியத்தில் ஒரே நாளில் 8 அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
ஒன்றிய செயலாளர் பெரியசாமி , மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், மாவட்டத் துணைச் செயலாளர் மயில்வாகனன், நிர்வாகி பிரபு, மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவர் சௌந்தரராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் தக்காளி தங்கராசு,ஒன்றிய ஆணையர் குணசேகரன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். பாப்பாபட்டியில் 105 , வாளசிராமணியில் 87, மேட்டுப்பாளையத்தில் ஆண்கள் பள்ளியில் 198, பெண்கள் பள்ளியில் 134 , தா.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 141, பெண்கள் பள்ளியில் 120 , பைத்தம்பாறையில் 89 , தும்பலத்தில் 94 சேர்த்து மொத்தம் 968 மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. முன்னதாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் வரவேற்றனர். இறுதியில் உடற்கல்வி ஆசிரியர்கள் நன்றி கூறினர்.