தனியார் பேருந்துகள் போட்டி போட்டு அதிவேகத்தில் இயக்கம்: நடத்துநர் கீழே விழுந்து காயம்
திருச்சி, டிச.17 திருச்சி மாநகரில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு அதி வேகத்தில் இயக்கம் – நடத்துநர் பேருந்தில் இருந்து கீழே விழுந்து காயம் – பயணிகள் ஓட்டம்
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று சத்திரம் பேருந்து நிலையத்தை நோக்கி இரண்டு தனியார் பேருந்துகள் புறப்பட்டு வந்தது. மத்திய பேருந்து நிலையத்தை கடந்து தலைமை தபால் நிலைய சாலையில் மேலப்புதூர் அருகே வந்த பொழுது இரண்டு தனியார் பேருந்துக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்தை ஓட்டிய தங்கராஜ் அதிவேகமாக பேருந்தை ஓட்டியுள்ளார். மேலப்புதூர் அருகே வந்த பொழுது தனியார் பேருந்துகள் போட்டி போட்டு அதி வேகமாக ஓட்டு சென்ற பொழுது ஒரு தனியார் பேருந்து ஓட்டுநர் பிரேக் அடித்ததில் அந்த பேருந்திலிருந்த நடத்துநர் கீழே விழுந்து காயம் அடைந்தார். இதில் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்து விட்டு இறங்கி ஓடினார்கள். தகவலறிந்த போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் விரைந்து வந்து இரண்டு பேருந்துகளையும் ஓட்டுனர், நடத்துனர்களிடம் விசாரணை நடத்தினர். தனியார் பேருந்து ஓட்டுநர் தங்கராஜ் குடிபோதையிலிருந்தது தெரியவந்தது. காவல்துறையினர் அவரை சோதனை செய்ததில் அளவுக்கு அதிகமாக குடித்து இருந்தது தெரிந்தது. அவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு தனியார் பேருந்து ஓட்டுநர் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் போடப்பட்டது.
திருச்சி மாநகரில் தொடர்ந்து தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு பேருந்துகளை இயக்குவது தொடர் கதையாக உள்ளதாக பயணிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.