அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தாததால் விவசாயிகள் தொடர் போராட்டம்
திருச்சி, ஜன.24 விவசாயிகள் போராட்டத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாததால் இரவில் கொட்டும் பனியில் சாலை நடுவே அமர்ந்து விவசாயிகள் தொடர் போராட்டம்
விவசாய விளைப் பொருள்களுக்கு லாபகரமான விலை வழங்கிடவும், காவிரி கோதாவரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும், கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகளின் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வனவிலங்குகளிடமிருந்து விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்க வேண்டும், டெல்லியில் போராடச்சென்ற விவசாயிகளை நாக்பூரில் வழிமறித்து கைது செய்ததை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறை மற்றும் கைது நடவடிக்கையை கையாளும் தமிழக அரசை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் தற்பொழுது சாலையின் நடுவே கொட்டும் பனியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் தொடர்ந்து போராட்டத்தை விவசாயிகள் சாலையில் நடுவே அமர்ந்து நடத்தி வருகின்றனர்.