சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
திருச்சி, ஜன. 30 திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், கடந்த 18.06.2021 அன்று இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் (வயது 29) என்பவர், நள்ளிரவில் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், காட்டுப்புத்தூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சசிக்குமாரை கைது செய்தனர்.
20 ஆண்டு சிறை : இந்த வழக்கின் விசாரணை திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் செல்வி சுமதி ஆஜராகி வாதிட்டார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சண்முகப்பிரியா நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், குற்றம் சாட்டப்பட்ட சசிக்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நீதிமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக கவனித்த காட்டுப்புத்தூர் நீதிமன்ற காவலர் மணிகண்டனை, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.