ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி காந்தி சந்தையில் பூக்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பூக்களின் வரத்து சற்று குறைவாகவே இருந்தது. மழை காரணமாக பூக்கள் சரியான விளைச்சல் காணாதோ என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்த நிலையில், பூக்கள் நல்ல விளைச்சலை கண்டுள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ந்துள்ளனர். எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் பூக்கள் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.கடந்த சில நாட்களாக பண்டிகைகள் பெரிய அளவில் இல்லாத சூழலில் பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய், 60 ரூபாய் என்ற குறைந்த விலையிலேயே விற்கப்பட்டது. இந்நிலையில் முக்கிய விழாவான ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.

கிலோ ஒன்றுக்கு சுமார் 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கும் வியாபாரிகள், பூக்களின் வரத்தைப் பொறுத்து விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

காந்தி மார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி…(கிலோ ஒன்றுக்கு)
செவ்வந்தி 150 to 200 ரூபாய்
மல்லி 400 to 500 ரூபாய்
முல்லை 500 to 600 ரூபாய்
கேந்தி 80 to 100 ரூபாய்
பிச்சிப்பூ 200 ரூபாய்
பெங்களூர் ரோஸ் 200 to 240
பன்னீர் ரோஸ் 150 ரூபாய்.
மாசிப்பச்சை சிறிய கட்டு 10 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விலை அதிகமாக இருந்தாலும், பண்டிகை காரணமாக பூக்களை வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மலர் விற்பனை செய்யும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.