திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுடன் ஆலோசனை கூட்டம்
திருச்சி, மே 2 தி.மு.க. வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ காணொளி மூலம் விளக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் தி.மு.க சட்டத்துறைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கலந்துகொண்டு, வாக்கு எண்ணும் மய்யங்களில் முகவர்கள் எவ்வாறு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான விளக்க உரையாற்றினார். மேலும் வாக்கு எண்ணிக்கை மய்யத்திற்குள் நுழைவது முதல், படிவம் 17-அய் சரிபார்ப்பது மற்றும் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முடிவுகளை உறுதி செய்வது வரை சட்ட ரீதியான நுணுக்கங்களை என்.ஆர். இளங்கோ முகவர்களுக்கு விளக்கினார்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் இனிகோஇருதயராஜ், மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அப்துல் சமது, தொகுதி பார்வையாளர்கள் கே.என். சேகரன், மறைமலை, தலைமை முகவர்கள் மற்றும் அந்தந்தத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.