இடிவிழுந்து டிரான்ஸ்பார்மர் சேதம்: குடிநீரின்றி தவிக்கும் கிராம மக்கள்- சீரமைக்க கோரிக்கை
திருச்சி, மே 7 டிரான்ஸ்பார்மரில் இடிவிழுந்ததால் குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் கிராம மக்கள், டிரான்ஸ்பார்மரை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணிகண்டத்தை அடுத்த அழுந்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் பாத்திமா நகர், குமரப்பட்டி, வேடம்பட்டி, அய்யன்தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளுக்கான மின் அலுவலகம் மேலபச்சகுடி அருகே பாத்திமா நகரில் உள்ளது.
இந்நிலையில், கடந்த மே 2-ம் தேதி இப்பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழையால் அய்யன்தோப்பு(விஷன் பேரடைஸ் அருகே) மற்றும் வேடம்பட்டி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இடி விழுந்தது. இதில், மின் மாற்றி பெட்டிகள் சேதமடைந்தன.
இதனால், குமரப்பட்டி, வேடம்பட்டி, அய்யன்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது. குடிநீருக்கான மோட்டாரையும் இயக்க முடியாததால், குடிநீர் இன்றி 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், விவசாயத்துக்கும் நீர் பாய்ச்ச முடியவில்லை.
இதுகுறித்து மின்சார வாரிய அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தால், அவர்கள் அப்பகுதி மக்கள் ஏதேனும் செய்தால், செய்யலாம் என்கின்றனர். இடி தாக்கியதுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என வேதனை தெரிவிக்கும் மக்கள் ‘எதிர்பார்த்து’ காத்திருக்கும் மின்சார வாரிய மேலபச்சகுடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மின் மாற்றிகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.