எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி விளையாட்டு விழா: சிவப்பு நிற அணியினர் முதலிடம்
திருச்சி,மே 7 திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 28-வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக கல்லூரி மாணவர்களின் இசைக்குழு முழங்க, நீலம், பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நான்கு வண்ண அணிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் முகமது யூனுஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரி துணைத் தலைவர் டாக்டர் அப்துல் ஜலீல் கல்லூரிக் கொடியை ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, கல்லூரி முதல்வர் நவீன்சேட் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக ஆசியப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் மணிகண்ட ஆறுமுகம்
கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இறுதியில், அதிக புள்ளிகளைப் பெற்ற சிவப்பு நிற அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று கல்லூரியின் சுழற்கோப்பையைக் கைப்பற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி பேசிய மணிகண்ட ஆறுமுகம் :
“விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் சாதித்து நமது தேசியக் கொடிக்கு பெருமை சேர்க்கும் வாய்ப்பு விளையாட்டு வீரர்களுக்கு உண்டு. மாணவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு பெரும் சாதனையாளர்களாக உருவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்
நிகழ்ச்சியின் முடிவில் இயந்திரவியல் துறை இணைப் பேராசிரியர் தண்டாயுதபாணி நன்றியுரை ஆற்றினார். உடற்கல்வி இயக்குனர் காந்திமதி விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.