ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.16 லட்சம் பணம் பறிமுதல் : 3 பேரிடம் விசாரணை
திருச்சி, ஜூன்.29 திருச்சியில் ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.16 லட்சம் பணம் பறிமுதல் : 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ரெட்டமலை பகுதியில் நேற்று பகல் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அமர்ந்திருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் எழுந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டிச்சென்று பிடித்து அவர்களிடம் இருந்த பையை வாங்கி போலீசார் சோதனை செய்தனர். அதில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அது ஹவாலா பணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் அடைந்தனர்.
உடனே 3 பேரையும் பணத்துடன் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த மாடசாமி, கார்த்திக், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த முருகேசன் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் வைத்திருந்த பையில் மொத்தம் ரூ.16 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கேட்ட போது, அந்த பணம் தாங்கள் ஏர் டிராவல்ஸ் நிறுவனத்தில் விமான கட்டணத்துக்காக செலுத்த வேண்டிய தொகை என்று கூறினார்.
ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் எதுவும் அவர்களிடம் இல்லாததால், இது குறித்து வருமானவரித்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பணத்துக்கான உரிய ஆவணங்களை வருமான வரித்துறையினரிடம் காண்பித்து விட்டு பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அவர்களிடம் போலீசார் அறிவுறுத்தினர். இது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.