லஞ்சம் பெற்ற வழக்கில் திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய முன்னாள் பொது மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை
பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம், குன்னம் தாலுகா, ஞானசேகரன் வயது 71 த/பெ.சீனிவாசன்,என்பவர் தன்னிடம் உள்ள நான்கு பால் சேகரிப்பு வாகனங்களுக்கு அய்யலூர், லாடபுரம், செட்டிகுளம் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளுக்கு வழிதட அனுமதி உத்தரவை வழங்குவதற்காக ரூ.25,000/- கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில், திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஓன்றியம் லிமிடெட், முன்னாள் பொது மேலாளர், சுப்பையன், வயது 65 என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நக்கசேலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் ஞானசேகரன் என்பவர் தன் பெயரிலும், தன் மனைவி மற்றும் நண்பர்கள் பெயர்களில் உள்ள சரக்கு வாகனங்கள் வைத்து தொழில் செய்து வருகிறார். திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் என்ற ஆவின் நிறுவனத்திற்கு பால் சேகரிப்புப்பணிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வாகனங்கள் தேவைபடுவதாக 10.01.2008ஆம் தேதி நாளிதழில் டெண்டர் கோரப்பட்டிருந்ததை பார்த்து, அய்யலூர், லாடபுரம், செட்டிகுளம் மற்றும் அரியலூர் ஆகிய வழிதடங்களில் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். மேற்படி நான்கு வழிதடங்களில் பால் சேகரிப்பு பணிக்கு அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில், அந்த உத்தரவை பெறுவதற்காக 18.02.2008ஆம் தேதி காலை சுமார் 11.30 மணியளவில் திருச்சி, கொட்டப்பட்டு, ஆவின் அலுவலக பொது மேலாளர் சுப்பையன் என்பவரை சந்தித்து நான்கு வழிதடங்களில் பால் சேகரிப்பு வாகனங்களுக்கான உத்தரவை கேட்டபோது, மேற்படி உத்தரவை கொடுப்பதற்காக திருச்சி, ஆவின் பொது மேலாளர் சுப்பையன் ரூபாய் 25,000/- லஞ்சம் கேட்டது தொடர்பாக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 18.02.2008ஆம் தேதி குற்ற எண்.06/2008-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 19.02.2008ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் ஞானசேகரன் என்பவரிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.25,000/- த்தை கேட்டு பெற்ற போது திருச்சி, ஆவின் அலுவலக பொது மேலாளர் சுப்பையன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று 29.06.2026ஆம் தேதி விசாரணை முடிவுற்று திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு , , திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஓன்றியம் லிமிடெட், முன்னாள் பொது மேலாளர் சுப்பையன், வயது 65 என்பவர் லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ15,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், மேலும் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.15,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட சிறை தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
மேற்படி வழக்கினை காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞராக கோபிகண்ணன் அவர்கள் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.