ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் கைது
திருச்சி, ஜூலை 1 திருச்சி, மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை கல்வி) திருச்சி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் மாவட்ட கல்வி அலுவலர் கையூட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்ட கல்வி அலுவலராக(இடைநிலை) புகழேந்தி பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக தேவி பணிபுரிந்து வருகிறார். அவரது வருடாந்திர ஊதிய உயர்வு, TET தேர்வில் தேர்ச்சி பெற்றது தொடர்பான நிலுவை தொகை பில் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்க கேட்டு, மேற்படி மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தியை, தேவியின் கணவர் இளமுருகு சந்தித்து கோரிக்கை வைத்தபோது வருடாந்திர ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்க ஏற்பாடு செய்ய ரூ.30,000/- லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளமுருகு நேற்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேற்று துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகுன், சேவியர்ராணி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி லஞ்சப்பணம் ரூ.30,000/-ஐ இளமுருகுவிடமிருந்து திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் முசிறியில் உள்ள புகழேந்தியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) லஞ்சம் வாங்கி சிக்கிய சம்பவம், கல்வித்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.